நோக்கம்

ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை

உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச் சங்கமானது நாடியுள்ளது. அதன் முதற்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை ஹூஸ்டனில் நடைபெற்ற சந்திப்பில் அங்குள்ள தமிழர்கள் வழங்கியுள்ளனர். ஹூஸ்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாயில் 42 கோடி தேவைப்படுகிறது. இதில் பாதித்தொகையான 21 கோடி ரூபாயை டெக்ஸாஸ் மாகாண அரசு வழங்குகிறது. மீதமுள்ள 21 கோடி ரூபாயைச் சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமும் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் தமிழ் இருக்கை
அமைக்கப்படுவதற்கான தேவை

தமிழைப் பொறுத்தமட்டில் இரண்டு விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய வேண்டியது தேவையாக இருக்கிறது. ஒன்று தமிழின் தொன்மை. மற்றொன்று தமிழின் பண்பாடு. உலகில் உள்ள தொல்லியல், மொழியியல் அறிஞர்கள் மத்தியில் தமிழ் செம்மொழி என்பது உணரப்பட்டுள்ளது. தமிழின் பழைமை குறித்தும் அவர்களிடம் ஒரு நிறைவான கருத்து இருக்கிறது. தமிழின் தொன்மையை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியங்களை ஆய்வு செய்ய தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழின் தொன்மையை எப்படி ஆராய்வது

ஒரு மொழியின் தொன்மையை ஆய்வதற்கு இலக்கியங்கள் மட்டும் ஆதாரம் இல்லை. இலக்கியங்களுடைய காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வெட்டுகளும் தொன்மையை ஆராய்வதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், கல்வெட்டுகள் எப்போதும் முழு உண்மையைக் கூறுவதாக அமையாது. எனவே கல்வெட்டுகள் ஆராய்வதில் மிகுந்த கவனம் தேவை. கீழடி நடந்தது போன்ற அகழ்வாராய்ச்சிகள், பிற நாடுகளில் காணப்படுகின்ற தமிழ் தொன்மங்கள் மூலமாக ஆராயலாம். இவை அனைத்தும் தமிழர்கள் கடல் வழி வாணிபம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள். இவற்றை எந்தெந்த காலகட்டங்களில் கைப்பற்றப்பட்டவை என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். இப்படி பல்துறை ஆராய்ச்சி நடத்தித்தான் தமிழின் தொன்மை நிர்ணயிக்கப்படும். இந்தக் காரியங்களை மேற்கொள்வதற்காகத்தான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் தமிழ் இருக்கை எதற்காக?

நம்முடைய தமிழின் தொன்மையால் நாம் உலகறியப்படவில்லை. 2000-ம் ஆண்டுகளுக்கு மேலான மொழியாகத் தமிழ் இல்லாமல் இருந்தால்கூட நாம் உலகறியப்பட்டிருப்போம். இந்த விஷயத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பழங்காலத்தில் தமிழர்கள் கடலோடி வணிகர்களாக இருந்தார்கள். உலக வணிகத்தின் ஒரு பகுதியை நாம் ஆட்சி செய்துகொண்டிருந்தோம். இந்துமா பெருங்கடலைத் தமிழர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.

இந்துமா பெருங்கடலின் நிலப்பரப்புகளை அறிந்து வைத்திருந்தோம். சீனாவிலிருந்து ரோம் வரை தமிழர்கள் அன்றே வணிகம் செய்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதன் தொன்மை மட்டும் அதற்கு உதவாது. அந்த மொழியைப் பேசுபவர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களைப் பெருக்கிக் கொண்டால், அவர்களுடைய பொருளாதார வளங்கள் நிலைத்து நிற்கும் என்றால் மொழி நிலைத்து நிற்கும், இன்னும் செழித்து வளரும்.

மொழியின் தொன்மையை ஆராய ஹார்வர்டில் இருக்கை அமைக்கப்பட்டது என்றால், தமிழர்களுடைய வணிக கூறுகள், வணிக மேலாண்மை, வணிக மேன்மை 2000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கை உதவும். தமிழர்களின் வணிக மேம்பாடு 2000-ம் ஆண்டுக்கு முன் எப்படி இருந்தது? தற்போது எப்படிப் பின்தங்கி இருக்கிறது? இதை எப்படி சீர் செய்வது என்பது போன்ற ஆய்வுகள்தான் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் முதன்மையான நோக்கம். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைய வேண்டியது அவசியம். இன்று ஏறத்தாழ 130 நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்த 130 நாடுகளிலும் இருக்கும் தமிழர்கள் வளத்துடன், நிறைவுடன் அந்தந்த நாடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மிகப்பெரும் அதிகார வர்க்கத்தினராகவோ, ஆட்சி, அதிகாரம் மிக்கவராக இல்லை. சாதாரண மனிதர்களாக, வியாபாரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ அந்த நாட்டில் மட்டுமே வணிகம் செய்கிறார்கள்.

ஒரு நாட்டில் வாழும் தமிழர்களை பிற நாட்டில் வாழும் தமிழர்களுடன் வணிக உறவை ஏற்படுத்த முயற்சி செய்தோம் என்றால் அது மிகப்பெரிய பலன் அளிக்கக்கூடியவையாக இருக்கும். இதன் மூலமாக மற்ற நாட்டவர்களுடனும் வணிகம் செய்ய முடியும். இதெல்லாம் சாத்தியமாக 50 அல்லது 60 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அதற்கான வித்து இன்றே விதைக்கப்பட வேண்டும். அப்படி செய்யப்படுமானால் தமிழர்களின் நிறை, குறைகளை ஆய்வு செய்யப்பட முடியும். இப்படிப்பட்ட ஆய்வுகள் தமிழர்களை மறுபடியும் வணிக சக்திகளாக நிலைநிறுத்த செய்ய இயலும். அதனால் தான் ஹூஸ்டன் தமிழ் இருக்கை தமிழர்களின் வணிக மேம்பாட்டை ஆராய்வதே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. தமிழர்களின் வணிக மேம்பாடுகள் உயர பல்வேறு இருக்கைகள் தேவைப்படுகின்றன. இதனால்தான் ஹூஸ்டனில் தமிழ் இருக்கை விரைந்து அமைய வேண்டிய தேவை இருக்கிறது.